திருப்பூர், ஆக. 4 –
திருப்பூர் நெருப்பெரிச்சல், ஜேஜே நகர், திருநங்கைகள் காலனி ஸ்ரீ நாகாத்தாள் அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்தாள் கோவிலில் 16-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. நேற்று பால் குடம், தீர்த்த குடம் எடுத்தல் ஆகியவை நடந்தது.
இந்த நிலையில் இன்று காலை பொங்கல் மாவிளக்கு முளைப்பாரி, மாலை அம்மன் ஊர்வலம், அலகு குத்தி பூ சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பக்தர்கள் பலர் 17 அடி நீளம் வரையிலான அலகு குத்தினர்.
இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சாமி வேடம் அணிந்து மேளதாளம் முழங்க நடனம் ஆடியும் வந்தனர். ஊர்வலம் கோவிலில் இருந்து திருநங்கைகள் அடுக்குமாடி குடியிருப்பு வரை சென்றது. இதற்கான ஏற்பாடுகளை திருநங்கைகள் சங்க தலைவிகள் அய்யம்மாள், திவ்யா மற்றும் பலர் செய்தனர்.



