நாகர்கோவில், ஆக. 4 –
நாகர்கோவில் மாநகராட்சிக் கூட்டம் மேயர் மேரி பிரின்சிலதா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆணையாளர் ஐஸ்வர்யா, மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், கவுன்சிலர்கள் செம்மாங்குளம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: செம்மாங்குளம் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த குளத்திற்கு தண்ணீர் எங்கிருந்து கொண்டு வரப்படும்? கழிவுநீர் கலக்காமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்? “வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் எந்த நிலையில் உள்ளது? என்றனர்.
இதற்குப் பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மாங்குளம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுநீர் குளத்தில் கலக்காமல் தடுக்க உறிஞ்சுக் குழாய்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் உறிஞ்சுக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.”செம்மாங்குளத்திற்கு தண்ணீர் கொண்டுவருவது தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டம் தயாரித்து வைத்துள்ளனர்; அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”நாகர்கோவில் நகரில் ஏற்கனவே முதற்கட்டமாக பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இரண்டாவது கட்டமாக பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. என்றனர்.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் கூறியதாவது:நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் முறையாகக் கொசு மருந்து அடிக்கவில்லை. இதனால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.””நாய்களின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலசூரங்குடி பகுதியில் பைப்லைன் உடைந்து பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் செல்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வலம்புரி விலை குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது.அந்த குப்பைகிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி உரிய நிவாரணம் வழங்குவதுடன் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.என்றனர்.
இதற்குப் பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது:நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. எந்தெந்த வார்டுகளில் கொசு மருந்து அடிக்கப்படுகிறதோ, அந்தந்த வார்டு கவுன்சிலரிடம் ஊழியர்கள் கையெழுத்து பெற்று வருகின்றனர்.”டெங்கு பாதிப்பைப் பொருத்தமட்டில், ஒரு சில இடங்களில் பாதிப்பு உள்ளது; அதைத் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீரைச் சேகரித்து வைத்துப் குடிப்பதால், அங்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களைத் தண்ணீரை நன்றாகக் காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.”அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டெங்கு பரவாமல் தடுக்கப்படுவதோடு, புகை மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் டெங்கு கட்டுக்குள் இருந்து வருகிறது. நாய் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்துவதுடன், கருத்தடை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது என்றனர்.
இக்கூட்டத்தில், 3-வது வார்டு கவுன்சிலர் அருள் சபிதா தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் வேலை செய்த காண்ட்ராக்டர் தன்னைத் தரக்குறைவாகப் பேசியதுடன் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, மாநகராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோல், மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலைக் கண்டித்து 5-வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டார். 46 வது வார்டு கவுன்சிலர் வீரசூரபெருமாளும் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



