நாகர்கோவில், ஏப். 17 –
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம். ஆர். காந்தி எம்எல்ஏ இன்று காலை சூரப்பள்ளம் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மஞ்சாடி அம்மன் கோவில், புதுமடம், புதூர் விநாயகர் கோவில், அழகன்விளை, கணபதிபுரம், கிழக்கு கணபதிபுரம், தெக்கூர், சன்னதி தெரு, பூச்சிக்காடு, ஆலங்கோட்டை, கோவில் புரம், பரமன்விளை, ஆறு தெங்கன்விளை, அழிக்கால், பிள்ளை தோப்பு போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். மாலையில் வெள்ள மோடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் எம்.ஆர்.காந்தி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தாமரை சின்னத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதி வெற்றியை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலம் எம்எல்ஏவாக ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு தந்துள்ளேன். ரேஷன் கடைகள், சமுதாய நல கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டியுள்ளேன். தொகுதி நிதி முழுவதும் 100 சதவீதம் மக்களுக்காக செலவழித்துள்ளேன்.
என்னை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் சந்திக்கலாம். பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை தர வேண்டும். பெண்களுக்கு ரூ. 2000 உதவி தொகை கிடைக்கும். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் பிரிட்ஜ் கிடைக்க வழி வகைகள் செய்யப்படும். கிராமங்களில் குடிநீர், சாலை வசதி முறையாக செய்து தரப்படும். அரசு பஸ்கள் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் நேரடி கவனத்திற்கு செல்லும் வகையில் முன்மாதிரி தொகுதியாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாற்றி காட்டுவேன். எனவே இந்த முறை மீண்டும் தாமரை சின்னத்திற்கு எனக்கு வாக்களிக்க வேண்டும். என கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது பல்வேறு கோவில்களில் அவர் தரிசனம் செய்தார். அவருக்கு பொது மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.



