நாகர்கோவில், ஜன. 27 –
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பீமனேரி பகுதியில் சிஎம்சி நகர் என ரியல் எஸ்டேட் நடத்தி வரும் நபர் அப்பகுதியில் இருந்த இந்து கோயிலை உடைத்து சிலைகளை திருடி சென்று விட்டு அப்பகுதியில் இருந்த மேடான மண் பகுதிகள் அனைத்தையும் எந்த அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக திருடி கடத்தி நெல் வயல்களில் மண்ணை கொட்டி பாசன கால்வாயை மூடி அராஜகம் செய்தும், தட்டிக் கேட்டவரை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து ஏற்கனவே செய்தி வெளியானது.
அது தமிழக அரசின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் கனிமவள திருட்டுக்கு அதிக பட்ச அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உடனடியாக நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற தோவாளை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் எவ்வளவு கனிம வளம் திருடப்பட்டு உள்ளது என்று அளவீடு செய்யும் பணிகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த இந்து கோவில் ஒன்று முழுமையாக தரைமட்டம் ஆக்கப்பட்டு அதிலிருந்து சிலைகள் திருடப்பட்டு உள்ளது. தற்போது அப்பகுதியை ஆய்வு செய்து அளவீடு செய்யும் பணியை நடத்தி, தரைமட்டமான கோவில் இருந்த பகுதி மற்றும் அதிலிருந்து சிலைகள் திருடி எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கோவில் இருந்த இடத்தின் புனித தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோயில் மற்றும் அதிலிருந்து சிலைகளை திருடியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையையும் துவங்கி உள்ளது.
ஆகவே அப்பகுதியில் இருந்து திருடப்பட்ட கனிம வளம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதிகப்படியான அபராதம் விதிப்பதோடு மூடப்பட்ட பாசன கால்வாயையும் மீட்பதோடு, தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோவில் இருந்த இடத்தின் புனிதத்தன்மையை காப்பாற்றும் பொருட்டும் அதில் உள்ள சிலைகளை மீட்டு அப்பகுதியில் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



