நாகர்கோவில், ஆக. 1 –
நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட்டவிளை பிள்ளையார் கோவில் பகுதியில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கோட்டாறு கலைநகரை சேர்ந்த சுதன் என்ற நண்டு சுதன் (34) பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மறித்து நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஷேக் முகமது என்பவர் சுதனிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுதன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலரின் கழுத்தை நோக்கி வெட்ட முயன்றுள்ளார். காவலர் சுதாரித்து கீழே குனிந்ததால் வெட்டு விழாமல் தப்பினார். மேலும் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் போலீசார் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சுதனை கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுதன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள நண்டு சுதன் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என தெரிய வந்தது. காவல்துறை ஆவணங்களின்படி இவர் ஏ பிரிவு ரவுடியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீது கோட்டாறு, சுசீந்திரம், ராஜாக்கமங்கலம், வடசேரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் என மொத்தம் 18 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.


