நாகர்கோவில், ஜூலை 20 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வடசேரி செட்டுப்புரை தெரு பகுதியை சேர்ந்த ராஜகான் என்பவரின் மகன் ஷாஹீன் கான் (24) என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 0.8 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதைப் பொருளான எம்டிஎம்எ எனப்படும் மெத்தாபெட்டமைன் பறிமுதல் செய்து வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கும், ஒரு அடிதடி வழக்கும் உள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து கூட்டாளி ஒருவர் மூலம் மெத்த பெட்டமைன் கிடைத்ததாக கூறியுள்ளார். அதன் பேரில் இவரின் கூட்டாளிகள் தொடர்பாக போலீசார் விசாரணை இறங்கி உள்ளனர். 3 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிகிறது. அதன் பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான ஷாஹீன் கான் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



