பூதப்பாண்டி, ஜூலை 11 –
தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி பூதப்பாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் திரு. சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கி தற்போது விவசாயிகள் கடை பிடிக்க வேண்டிய நெல் உர மேலாண்மை வேளாண் தொழில்நுட்ப செய்திகளை கூறினார். மற்றும் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் நஸ்ரின் அவர்கள் மண் வள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும் ஆய்வுக்கு மண் எடுப்பது பற்றியும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை சார்ந்த டெனிஷா உதவி பொறியாளர் அவர்கள் வேளாண் உபகரணங்களை பற்றி எடுத்து கூறினார். விமலா உதவி இயக்குநர்
வேளாண் வணிகம் அவர்கள் வேளாண் சார்ந்த விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் அவர்கள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் பற்றியும் நெல் பயிர் காப்பீடு பற்றியும் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றியும் எடுத்துக் கூறினார். உதவி கால்நடை மருத்துவர் ஹரிஹரன் அவர்கள் கால்நடைகள் பற்றியும் கோழி வளர்ப்பு பற்றியும் அவைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியை துணை வேளாண்மை அலுவலர் திரு. கணபதி சாமி அவர்கள் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு காணொளி மூலம் தொழில்நுட்பங்கள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.



