புதுக்கடை, ஏப். 8 –
தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபர்சன் என்பவரது விசைப்படகில் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்த விஜின் (30), நாகப்பட்டினத்தை சேர்ந்த வேலாயுதம் என்ற வினோத் (34) ஆகியோர் உட்பட பலர் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இன்று கடலில் மீன் பிடித்து விட்டு இயந்திர படகை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.
பின்னர் காலையில் சிறிது மீன்களை விற்பனை செய்துவிட்டு, படகு உரிமையாளரும் பணியாட்களும் வீட்டிற்கு சென்று விட்டனர். படகில் விஜின் மற்றும் வினோத் உள்ளிட்ட மற்றும் சிலர் காணப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மதியம் விஜின், வினோத் ஆகிய இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த வினோத் கையில் வைத்திருந்த கத்தியால் விஜினை வெட்டி உள்ளார். உடன் இருந்தவர்கள் தடுக்க முற்பட்ட போது அவர்களையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த விஜின் காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத்தும் காயம் ஏற்பட்டு அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


