நாகர்கோவில், ஜூன் 17 –
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அரசின் கடனுதவியுடன் சுயத்தொழில் மற்றும் வீட்டிலிருந்தபடியே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: திருவட்டாறு கொல்வேல் பகுதியில் கார்மல் அன்னை சுயஉதவிக்குழுவினர் டாடாமேரி என்பவர் வீட்டில் வாழைநாரில் இருந்து தயாரிக்கப்பட்ட கூடைகள், மேஜை விரிப்புகள், பைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிடப்பட்டது. அவற்றின் தரம் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து சுயஉதவிக்குழுவினரிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் ஸ்டார் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 15 பேர் இணைந்து இயற்கை மற்றும் செயற்கை பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூங்கொத்துகள் நேரில் பார்வையிடப்பட்டது. பாரம்பரிய முறையோடு நவீன வடிவமைப்புகளையும் புகுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, முற்றிலும் இயற்கையான முறையில் வாழைநாரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு தற்போதைய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இது போன்ற சுயதொழில்கள் மூலம் கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரம் உயரும். இத்தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் என்றும் துணையாக இருக்கும். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைபொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த திட்ட இயக்குநர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி)மோனிகா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், துறை அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



