திருப்பூர், மே 16 –
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலமுருகன் எம்எல்ஏவாக பதவி ஏற்று திருப்பூர் திரும்பினார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடி தீர ஒரு மாதத்திற்குள் பணிகளை முடித்து தருமாறு அறிவுறுத்தினார். மேலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்: திருப்பூரின் போக்குவரத்து நெரிசல் தீர முழுமையாக ஆய்வு செய்து மேம்பால திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருவது மற்றும் தலைவரின் பல்வேறு நலத்திட்ட செயல்கள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.



