திருச்சி, ஜூலை 07 –
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி பின்புறம் உள்ள கணபதி நகர் 4-வது தெருவில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான சிவா பிளாஸ்டிக் என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் குடோனில் மாநகரின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நபர்கள் மூலம் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனுக்கு வெளியே சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை அந்தப் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, தரம் பிரித்து வைப்பதற்காகச் சிமெண்ட் தரையில் குவியலாக வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவெனப் பரவியதுடன், விண்ணை முட்டும் அளவிற்குப் புகையும் வெளியானது.
இதுகுறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீவிபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. அதிகாலையில் நடந்த இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் பிளாஸ்டிக் எரிந்ததால் வெளியான நச்சுப் புகையினால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணபதி நகர் பின்புறம் வயல் வெளி மற்றும் உய்யக்கொண்டான் ஆற்றுக் கரைகளில் கூடுவதும், அப்பகுதியினரை அச்சுறுத்துவதும் தொடர் கதையாக இருக்கின்றது. அந்தப் பகுதியில் பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு குடோன்கள் பல இருக்கின்றன. அந்தவகையில், சிவா பிளாஸ்டிக் குடோனில் சேகரித்து தரம் பிரித்து வெளியே வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் யாரோ மர்ம நபர்கள் வைத்த தீயால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.



