தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் ஆ.மணி எம்பி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமை ஏற்று நடைபெற இருந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் காவல்துறை சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திரண்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர் நாட்டார் மாது, மாணவரணி அன்பரசன், சுந்தர் ,இளைஞரணி சிவகுரு, அசோக் குமார், கலைச்செல்வன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 100 – க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தருமபுரி நகரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சமூகத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.



