தஞ்சாவூர், ஆக. 25:
கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறிய குழந்தைகள், இளைஞர்களின் நல்வாழ்வுக்காக முன்னோடி திட்டம்
தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்வுக்காக ‘புதிய பாதை 2026’ என்ற முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் புனித சேவியர் தொழில் பயிற்சி மையக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரேவதி திட்டத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ரேவதி கூறியதாவது:
‘புதிய பாதை’ என்பது தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய மற்றும் முன்னோடியான திட்டமாகும். கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் முதல்முறையாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள், இளைஞர்களை கடந்த கால தவறுகளின் அடிப்படையில் நிராகரிக்காமல், அவர்களுக்கு புதிய வாய்ப்பையும், புதிய வாழ்க்கைப் பாதையையும் உருவாக்கித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் இணைந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அவர்கள் பயன்பெற்று புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் நிலையில், அதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களின் அடிப்படையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு முன்னுதாரணமாக அமையும்.
“கடந்த காலம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்காது. கல்வி, திறன் மற்றும் உழைப்பின் மூலம் புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நீதி குழும முதன்மை நீதிபதி ராஜேஷ் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பரமேஸ்வரி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



