கன்னியாகுமரி, ஜூலை 29 –
திற்பரப்பு மாஞ்சாகோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அபிநயா விஜய் (24). இவர் மெதுகுமல் தபால் நிலையத்தில் தபால்காரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 20.10.21 அன்று அபிநயா தபால் நிலையத்தில் தனியாக பணியில் இருந்த போது, மெதுமல் குண்டறவிளையை சேர்ந்த சத்திய நேசன் மகன் செல்வன் என்ற கண்ணன் (43) என்பவர் தபால் நிலையம் வந்து போஸ்ட் மாஸ்டரின் போன் நம்பரை கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அபிநயாவும் போன் நம்பரை கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் தாண்டி திரும்பி வந்த செல்வன் தவறான நம்பரை கொடுத்து விட்டாயா என ஆபாசமாக கேட்டு கன்னத்தில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயா அழுது கொண்டே தனது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் அண்ணன் அனீஷ் விஜய், அபிநயா-வை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற செல்வன் என்ற கண்ணன் ஆபாசமாக பேசி அனீஷ் விஜய்யையும் தாக்கியுள்ளார். மேலும் அபிநயா இனிமேல் இங்கு வேலைக்கு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதை அடுத்து படுகாயம் அடைந்த இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து இது சம்மந்தமான வழக்கு குழித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசின் குமார், குற்றவாளி செல்வன் என்ற கண்ணனுக்கு 8 மாத சிறை தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே குற்றவாளி செல்வன் ஒரு போஸ்கோ வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அந்த தண்டனையின் நாள் கணக்குப்படி அனுபவித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


