நாகர்கோவில், மார்ச் 11 –
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சார்லஸ் ஜெபக்குமார் (50). இவர் மோகா நகரில் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி வருகிறார். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல நகரங்களில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மார்த்தாண்டத்தில் இந்த இன்டர்நேஷனல் பள்ளி இருக்கிறது. மேலும் பல நகரங்களில் இந்த பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை சார்லஸ் ஜெபக்குமார் மேற்கொண்டு வந்தார். இதற்காக நில தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவரது குடும்ப நண்பர் டாக்டர் சதீஷ் என்பவர் மூலம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஜோசப் மரிய செபாஸ்டின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது அவர் அவரது மகன் பிரகாஷ் ஆகியோரின் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து சார்லஸ் நிலத்தை வாங்குவதற்காக பல்வேறு தவணைகளாக ரூ 10.5 கோடி கொடுத்ததா கூறப்படுகிறது.
நிலத்தை சார்லஸ் ஜெபகுமார் பெயரில் பதிவு செய்யாமல் ஜோசப் மரிய செபாஸ்டின் பெயரில் கிரய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்ததும் சார்லஸ் ஜெபக்குமார் தனது பணத்தை பயன்படுத்தி மோசடி செய்து ஏமாற்றியதாக ஜோசப் மரிய செபஸ்டின், மகன் பிரகாஷ் மீது மோகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள போலீசார் தந்தை மகன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் பணம் கைமாறிய இடம் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய பகுதி என்பதால் அந்த எப்ஐ ஆர் குமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பஞ்சாப் மொழியிலிருந்த அந்த எப் ஐ ஆர் சென்னையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தற்போது நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஜோசப் மரிய செபாஸ்டின் அவரது மகன் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


