சுசீந்திரம், ஏப். 22 –
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காக கடந்த 18ம் தேதி காலை 11 மணியளவில் கொடிமர பூஜைகள் செய்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குள தடுப்புச் சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்த நிலையில் அதனை சரி செய்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோடை காலம் என்பதால் பழையாற்றில் போதிய தண்ணீர் இல்லை. எனவே மோட்டார் பம்புகள் மூலம் சோழன் திட்டை அணையில் இருந்தும் பழைய ஆற்றில் இருந்தும் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. தண்ணீர் வரும் பாதையில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டிருந்தது. அதனை அகற்றி தற்போது தெப்பத் திருவிழாவிற்கான தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தெப்பக்குளம் தயார் நிலையில் உள்ளது.
ஐந்தாம் திருவிழாவான இன்று காலை 5:30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் தீருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை ஐந்து முப்பது மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து உற்சவமூர்த்திக்கு அஷ்டாபிஷேகமும் இரவு 9:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆறாம் திருவிழாவான நாளை காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒன்பதாம் திருவிழா அன்று காலை 6:00 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாள் திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை எட்டு முப்பது மணிக்கு விநாயகர் தேரில் விநாயகரும் சப்பர தேரில் சுவாமியும் அம்மன் தேரில் அம்மனும் அமரச் செய்து பக்தர்கள் தேரை ஒருமுறை கோவிலை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு சப்தாவர்ன காட்சியும் நடைபெறுகிறது. பத்தாம் திருவிழா அன்று இரவு 8 மணி அளவில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து மூன்று முறை தெப்பக்குளத்தை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு திரு ஆறாட்டு நடைபெறுகிறது.



