தஞ்சாவூர், ஜூலை 27 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ,வட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் ரேவதி கூறினார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நீர் வரவு செலவுத் திட்டம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த முதன்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் நீர் வரவு, செலவுத் திட்டம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து ஓய்வு பெற்ற விவசாய துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து உரிய அறிவுரைகள் வழங்கிட கூறப்பட்டதன் அடிப்படையில் ஒவ்வொரு துறை வாரியான அலுவலர்களிடம் நீர் சேகரிப்பு மற்றும் திட்டங்கள் குறித்து அறிக்கைகள் தயார் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் ரேவதி பேசுகையில்: நீர் சேமிப்பு குறித்து இரண்டு திட்டங்களாக 100 நாள் திட்டம், ஐந்தாண்டு திட்டம் செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. குளங்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி அதன் மூலம் மழை நீர் சேகரித்தல், அனைத்து அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப் புகளில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கலன்கள் அமைத்தல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றுதல், பண்ணை குட்டை அமைத்தல், தரிசு நிலங்களை உழுதல், தடுப்பணைகள் அமைத்தல், தரைக்குள் நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மழை நீர் சேகரித்தல் தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
மேற்காணும் ஒவ்வொரு துறையிலும் 15 நாட்களுக்குள் நீர் அறிக்கை தயாரித்து மழைநீர் சேகரிப்பு தொடர்பான விவசாயிகளை அறிக்கையாக அனுப்ப வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவ நாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



