நாகர்கோவில், ஜூன் 20 –
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயின் ஆட்சி ஒரு மாதத்தை கடந்துள்ளது. தவெக ஆட்சி எப்படி இருக்கிறது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமாரிடம் கேட்டப்போது அவர் கூறியதாவது: சினிமாவில் மாஸாக இருந்து வந்த ஜோசப் விஜய் மிக குறுகிய காலத்திற்குள்ளேயே ஆட்சியை கைப்பற்றியுள்ளார். முன்கூட்டி அறிவித்தது போலவே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பங்களித்து வரலாற்று சாதனையும் படைத்துள்ளார்.
ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் முடிந்துள்ளது. அதற்குள் முதல் சட்டமன்றத் தொடரிலேயே மேகதாது அணைகட்டு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி சட்டப்பேரவையில் அனைத்து கட்சி ஆதரவையும் பெற்றுள்ளது வரவேற்கதக்கது.
எங்கும் புதுமை, எதிலும் புதுமை காணும் தவெக ஆட்சி திராவிட கட்சிகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் அம்மா கட்சி பழுது பார்க்கும் நிலையில் உள்ளது.
வீர முழக்கமிடும் கறுப்பு துண்டு காரர் ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லி தவெகவுடன் நட்புறவு கொண்டாடுகிறார். சிவப்பு துண்டு காரரோ தவெக வின் கொள்கை பரப்பு செயலாளர் போன்று பேசி வருகிறார். காங்கிரஸ் காரர்களோ, ஆட்சியில் பங்கு என்கிற போர்வையில் தவெகவுடன் கரைந்தே போய் விட்டார்கள்.
பெரியாரையும் விட்டு வைக்கவில்லை. அம்பேத்கரையும் மறக்கவில்லை என்று ஆட்சியை தூக்கி பிடிக்கிறார்கள். கல்வி கூடங்கள் தொடங்குவதில் தாராளம், அம்மா உணவகங்கள் புதுப்பித்தல், டாஸ்மாக் கடைகள் அகற்றம், அறநிலைதுறையில் களை எடுப்பு என்று விசித்திர சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது தவெக அரசு.
வெள்ளை மனசு என்பது போல் வெள்ளை அறிக்கை, இப்போது மேகதாது அணை கட்டு பிரச்சனை, இதுவெல்லாம் 40 நாட்களுக்குள் நடத்தப் பட்ட தவெக அரசின் செயல் பாடுகள் என்று சொல்லலாம். நேற்று வரைக்கும் தனக்காக ரசிகர்களை வசிகரம் செய்தவர், இன்று தவெக ஆட்சி மூலம் தமிழக மக்களையே கபளிகரம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தவெக ஆட்சிக்கு வந்த ஒரு மாதக் காலத்திலேயே ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்.. பேஸ்.. நல்லாயிருக்கிறது.. என்கிற வகையில் தான் மக்களிடம் நல்ல வரவேற்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



