சேலம், ஜூலை 15 –
சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருசக்கர வாகன விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தீவிர காயங்களை குறைக்கும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமன்றி பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். சேலம் மாவட்டத்தில் 2025 – 2026 ஆண்டில் மொத்தம் 3733 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 461 விபத்துக்கள் இருசக்கர வாகனங்கள் ஆகும். இந்த விபத்துகளில் டன்465 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மாவட்டத்தில் நிகழ்ந்த மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் சுமார் 52% ஆகும். மேலும் உயிரிழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட தலை காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தலைக்கவசம் அணியாதது இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியமான காரணமாகும். இதனை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரு சக்கர வாகனங்களை இயக்கும் ஓட்டுபவர்கள் அனைவரும் பயண தூரம் குறைவாக இருந்தாலும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் வழக்கமாக தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். அதன் பட்டையை முறையாக பொருத்தி பாதுகாப்பாக அணிய வேண்டும்.
சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கையில் அமரும் பயணிகள் மீதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 1988 – ன் பிரிவு 129 மற்றும் பிரிவு 177 ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய விதிமுறைகளின் படி ரூபாய் 1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணிகள், கருத்தரங்குகள், உறுதிமொழி நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களின் மூலமும் தொடர்ந்து நடத்தப்படும். அதன்படி “ஒரு தலைக்கவசம் ஒரு உயிரை காப்பாற்றும்”.
சாலை விபத்துகளில் ஏற்படும் தலைக்காயங்களே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகின்றன. உங்கள் உயிரையும் உங்கள் குடும்பத்தின் நலனையும் பாதுகாப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது வழக்கமாக தலைக்கவசத்தை முறையாக அணிவதை கட்டாயம் கடைப்பிடியுங்கள். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் முழுமையாக கடைப்பிடித்து பாதுகாப்பான சேலத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.


