சென்னை, ஜூலை 18 –
பிரசாந்த் மருத்துவமனை, வேளச்சேரி கிளையில் இ.எல்.சி .ஏ எனப்படும் அதிநவீன லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தென் சென்னையில் இந்த வசதியைக் கொண்ட முதல் மருத்துவமனையாகவும், சென்னையில் இரண்டாவதாகவும் இது திகழ்கிறது.
இதன் மூலம் சிக்கலான இதய அடைப்பு உள்ள நோயாளிகள், பெரிய அறுவை சிகிச்சைகள் இல்லாமல், தங்கள் வீட்டிற்கு அருகிலேயே விரைவாக சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்ப முடியும். இந்த புதிய வசதியை திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் துர்வாசல் மற்றும் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த புதிய வசதியைத் தொடங்கி வைத்து, திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில்: “இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக இதய நோய் மாறிவிட்டது. மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே சுருங்கிவிடக் கூடாது. உலகத் தரம் வாய்ந்த இதய சிகிச்சையை தென் சென்னை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், பிரசாந்த் மருத்துவமனை இதுபோன்ற அதிநவீன சிகிச்சை முறையை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த மருத்துவ சேவையின் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவக் குழுவினரின் தொடர்ச்சியான பணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் டாக்டர் அரவிந்த் துர்வாசல் பேசுகையில்: “எந்த இரண்டு இதய அடைப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மிகவும் கடினமான இதய அடைப்புகளையும் பாதுகாப்பாகச் சரிசெய்யவும், ரத்த ஓட்டத்தை துல்லியமாக சீரமைக்கவும், சில நோயாளிகளுக்குப் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்கவும் இந்த ‘எக்ஸைமர் லேசர் கரோனரி அதெரெக்டமி’ உதவியாக இருக்கும். இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் எங்களது திறனை மேம்படுத்துவதோடு, நோயாளிகளுக்கு வலியற்ற எளிதான சிகிச்சை, விரைவாகக் குணமடைதல் மற்றும் நீண்டகால நன்மைகளையும் உறுதி செய்கிறது.” என்றார்.



