சங்கரன்கோவில், அக். 11 –
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வின் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பண்டைய வரலாறுகளை மீட்க வேண்டும் என சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கலை திருவிழாவில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கல்லூரிக் கலைத் திருவிழா தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.09.2025 முதல் 09-10-2025 வரை நடைபெற்றது. அதில் கவிதை, கட்டுரை, நடனம், நெருப்பில்லா சமையல், வாத்திய இசை உள்ளிட்ட முப்பது போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 698 மாணவர்கள் பங்கு பெற்றனர். 231 மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். புதையல் வேட்டை எனும் போட்டியில் 270 மாணவர்கள் பங்கு கொண்டனர். தற்காப்புக் கலை எனும் போட்டியில் சிலம்பம், வாள் வீச்சு, சுருள்கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவிகள் சிறப்பு செய்தனர்.
இப்போட்டிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்து துறைசார்ந்த பேராசிரியர்கள் வருகை புரிந்து நடுவர்களாகச் செயல்பட்டனர். ஒவ்வொரு நாளும் கல்லூரி முதல்வர்(கூடுதல் பொறுப்பு) முனைவர் வேணுகோபால் வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கலாகோபி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் மனோகரம்மாள், முனைவர் மகேஷ்பாண்டி ஆகியோர் செயல்பட்டனர்.
கல்லூரிக் கலைத்திருவிழாவின் நிறைவு விழா கல்லூரிக் கருத்தரங்க அரங்கில் வைத்து நடந்தது. கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.



