கோவை, ஜூலை 27 –
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து, கோவை பந்தய சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே. ஈஸ்வரன் கூறுகையில்: ஒன்றிய அரசு 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்துவதற்கு உகந்த நகரங்களாக இந்தியா முழுவதும் உள்ள 18 மாநகரங்களுக்கு அனுமதி அளித்தது. அதில் கோவையும் ஒன்று. கோவைக்கு அடுத்த நிலையில் இருந்த கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டு தற்போது மக்கள் பலனடைகின்றனர். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்துவோம் என்று 2024 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தால் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தகுதியான நகரமாக ஆகிவிடுமா? கோவையை விட மக்கள் தொகையில் குறைந்த பரப்பளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் குறைந்த வட மாநில மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் இந்தியாவின் மிகச் சிறந்த நகரமாக கோவை வளரும் கோவை வளர்ச்சியை தடை செய்யும் விதமாக ஒன்றிய அரசின் அறிவிப்பு உள்ளது. இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் வருமான வரி ஈட்டி தருகின்ற கோவைக்கு இந்தத் திட்டத்தை தர மறுத்த ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
மேலும் கோவை மாநகர வளர்ச்சிக்கு மாபெரும் துரோகம் செய்கிற ஒன்றிய அரசை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் டெல்லி ஜந்தர் மந்தர் சென்று அங்கும் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என்று அதிரடியாக கூறினார். மேலும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதை அறிந்த காவல்துறை முன்கூட்டியே காவலர்களை குவித்து வைத்திருந்தது இதனால் பந்தைய சாலை பகுதி சற்று பதட்டமான சூழ்நிலையில் இருந்தது.
முற்றுகைப் போராட்டம் செய்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே. ஈஸ்வரன், தலைமை நிலைய செயலர் ராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் பட்டாபி உட்பட ஏராளமானோரை காவல் துறை கைது செய்து சென்றது.



