நாகர்கோவில், ஜன. 22 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கோதையாற்றில் முதலை உலாவி வருவதாக பல புகார்கள் வனத்துறைக்கு பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து வனத்துறை மறுத்து வந்தது. இந்த நிலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்த இரவு மற்றும் பகல் வீடியோக்கள் மூலம் முதலை இருப்பதை உறுதி செய்த வனத்துறை, முதலை இருந்ததாக வீடியோ வெளியான உறைநீர் கிணற்றின் மீது பிராயிலர் கோழியை கட்டி வைத்து முதலையை பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி செய்தது. இந்த செயல் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. கோழியும் அடிக்கும் வெப்பத்தில் செத்து போனது.
பின்னர் டெர்மல் டொரோன் கேமரா மூலம் தேடும் பணி நடந்தது. ஆனால் முதலை சிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலை உலாவிய வீடியோ மீண்டும் வைரலானது. இதனால் நெருக்கடிக்கு உள்ளான வனத்துறையினர் நேற்று ஒரு சிறிய படகில் சென்று கோதையாற்றில் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கையும் திருப்தி அளிக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே உரிய முறையில் முதலையை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
இந்த நிலையில் படகில் முதலையை தேடும் வனத்துறையினரிடம் இப்படி தேடினால் எப்படி முதலை கிடைக்கும்? இதற்கான வலை வைத்து கூண்டு வைத்து பிடியுங்கள் என அப்பகுதி கமலம், வசந்தா என்ற முதாட்டிகள் வனத்துறைக்கு கூறும் அறிவுரை வீடியோ வைரலாகி வருகிறது.



