நாகர்கோவில், 22.08.2026.
கொல்லங்கோடு நகராட்சி மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொல்லங்கோடு நகராட்சி சமத்துவபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 6-வது மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.48.30 லட்சம் மதிப்பில் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மார்த்தாண்டம்துறையில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெதுகும்பல் பகுதியில் ரூ.30.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளையும், பைங்குளம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதார மையப் பணிகளையும் பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் சங்கர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



