நாகர்கோவில், மே 9 –
குமரி கடல் பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த மழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் கடும் வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்தனர். நீண்ட நாளைக்கு பின் குளிர்ந்த சூழ்நிலை மாவட்டத்தில் நிலவியது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் மக்கள் குழுமையான கால சூழ்நிலையை உணர்ந்தனர். மலையோரப்பகுதிகளில் மழையால் அணையில் நீர்வரத்தும் சற்று உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 47.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொட்டாரம் 8.2, மயிலாடி 3.2, நாகர்கோவில் 20.4, பூதப்பாண்டி 28.4, முக்கடல் 31.4, பாலமோர் 18.4, தக்கரை 14, பேச்சிப்பாறை 27.2, பெருஞ்சாணி 21.4, புத்தன் அணை 20.8, சுருளகோடு 33.6, திற்பரப் 6.2 என மழை பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மடையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை 152 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 44 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதே வேளையில் 80 அடி தண்ணீர் தான் அணைக்கு வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது கன்னிப்பு சாகுபடி பணிகள் துவங்கி உள்ளன. மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.


