நாகர்கோவில், ஜூன் 26 –
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தினையொட்டி வீரர் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வீரர் வீரங்கனைகளுடன் 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஒட்டத்தினை ஓடி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்: ‘போதை இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய ஒட்டுமொத்த சமுதாயமும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் கைகோர்க்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ம் தேதி உலகப்போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என கூறினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுகொண்டதோடு, ஓட்டத்தை ஆரம்பி போதையை நிறுத்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இம்மரத்தான் ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கில் துவக்கி, மணிமேடை, வேப்பமூடு, மாவட்ட நீதிமன்ற சாலை, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி, வசந்தம் மருத்துவமனை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.
நடைபெற்ற நிகழ்வுகளில் பள்ளிகல்வி துறை இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், விளையாட்டு அலுவலர்கள், வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



