சேலம், ஜுலை 2 –
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்கு ஆதாரமாகவும், 25 மாவட்ட மக்களின் குடிநீருக்கு ஆதாரமாகவும் காவிரி ஆறு உள்ளது. கர்நாடக அரசு தற்போது அதன் குறுக்கே மேகதாது அணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்கு நீர் வருவது தடுக்கப்பட்டு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தடுக்க காவிரியில் மேகதாது அணை கட்டும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
குடகு மலையில் உருவாகும் காவிரி கர்நாடகத்திலும் மற்றும் தமிழகத்திலும் பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. தமிழகத்தினுள் நுழைவதற்கு முன்பாக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியும் அதன் துணை ஆறான அமராவதி ஆறும் கலக்கும் இடத்தில் காங்கிரிட் அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசு தேவையான நீரினை அணைகளில் தேக்கி வைத்து கொண்டி. ருந்தும் கூடுதலாக மேகதாது அணையும் கட்டப்பட்டால் மொத்த நீரையும் கர்நாடகத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் தமிழகத்தின் பாசன மாவட்டங்களில் விவசாயம் பொய்த்து தமிழகம் பாலைவனம் ஆகிவிடும்.
காவிரியில் டெல்டா மாவட்டங்கள் தவிர சென்னை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் ஆதாரம் மேகதாது அணை கட்டப்பட்டால் பெரும்பாலான பகுதிகள் பஞ்சம் ஏற்பட்டு குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் அரியலூர் சோழர் பாசன திட்டம் போன்ற அனைத்து திட்டங்களும் முடங்கி அந்தந்த பகுதியில் வாழும் தமிழக மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தருவதில்லை. கர்நாடகத்தில் அணைகளில் உள்ள உபரி நீரை மட்டுமே அவ்வப்போது தமிழகத்திற்கு திறந்து விடுகிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் சுமார் 5000 ஹெக்டர் பரப்பளவில் காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழிந்து போகும் மேலும் பல மலைவாழ் கிராமங்களும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக முடியும். எனவே மேகதாது அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழகத்துக்கு எதிரான சதித்திட்டத்தை முறியடிப்பது குறித்து மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜூலை 1ம் தேதி அன்று பிலிகுண்டுலுவில் இருந்து விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி இன்று ஜூலை இரண்டாம் நாள் சேலத்தில் இருந்து மீண்டும் பரப்புரையை ஆரம்பித்து ஜூலை நான்காம் நாள் பூம்புகாரில் நிறைவு செய்கிறார்.
எனவே மேகதாது அணையை தடுத்து நிறுத்துவதற்கான அறப்போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் அழைக்கிறார்.



