பரமக்குடி,ஜூன். 7 –
பரமக்குடியில் நகர் இளைஞர் அணி சார்பாக கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மராத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரிசுகளை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், திமுகவின் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நான்காம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. மாரத்தான் போட்டியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு எட்டு கிலோமீட்டர், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி கலந்து கொண்டனர். பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, ஓட்ட பாலம்,காட்டு பரமக்குடி, மணி நகர் தெளிச்சாத்த நல்லூர் என மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம் சான்றிதழும் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கினார். இப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் 70 வயதில் 101 வது மாரத்தான் போட்டியை கடைசியாக வந்து முடித்து வைத்தார். 70 வயது முதியவரைப் பாராட்டி மாவட்டச் செயலாளர் மற்றும் பரமக்குடி எம்எல்ஏ ஆகியோர் சிறப்புப் பரிசினை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் குமார், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.