கன்னியாகுமரி, ஜூலை 24 –
கொட்டாரம் மேலத்தெருவில் வசிக்கும் மயிலு பிள்ளை என்ற பிச்சை (89). இவர் சமையல் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று திடீரென மாயமானார். இவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று கொட்டாரம் பில்லா குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைக்கும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர்.
இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


