கன்னியாகுமரி, ஜூன் 8 –
கன்னியாகுமரி அருகே நாடான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் தங்கராஜ் (37). கொத்தனார் வேலை பார்க்கிறார். கொட்டாரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம் (47). டிரைவரான இவர் நாடான்குளத்தில் உள்ள இசக்கியம்மன் கோயில் பூசாரி ஆகவும் உள்ளார். இந்த நிலையில் இசக்கியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவின் போது கோவில் வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று முடிவு செய்து கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டது.
சம்பவ தினம் ஆதிலிங்கத்தின் மகன் ஸ்ரீ ராகவேந்திரன் என்பவர் தனது பைக்கை கோவில் வளாகத்தில் நிறுத்தியதாக தெரிகிறது. இதனை பார்த்த தங்கராஜ் கோயில் வளாகத்தில் பைக் நிறுத்தக்கூடாது என கூறி வண்டியை அகற்றுமாறு கூறினார். இதனை ஸ்ரீ ராகவேந்திரன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிலிங்கம் இன்று அரிவாளுடன் சென்று கோயிலில் நின்ற தங்கராஜிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றார்.
தங்கராஜ் சுதாரித்துக் கொண்டு விலகினாலும் அவரது தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து தங்கராஜ் ஓடவே விடாமல் துரத்தி சென்று மீண்டும் கையில் வெட்டினார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே ஆதிலிங்கம் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. காயமடைந்த தங்கராஜ் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதி லிங்கத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடான்குளத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.


