கன்னியாகுமரி, ஜூன் 19 –
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பாக கன்னியாகுமரியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நிகழ்ச்சி செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முக்கியமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இடை நிற்றல் மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் படிப்பை தொடர்வது மைபாரத் மையங்கள் சார்பாக தொடர் முயற்சி எடுக்கவும் மேலும் 8 மாவட்டங்களில் புதிய மைபாரத் அலுவலகங்கள் தொடங்கி மைபாரத் திட்டங்களை அம்மாவட்ட இளைஞர்கள் இடையே கொண்டு சேர்ப்பது எனவும், வளர்ந்த பாரதத்திற்கான போதைப்பொருள் இல்லா இந்தியா, விக்சித் பாரத் நடைப்பயணம், இளைஞர் மன்ற மேம்பாட்டு இயக்கம், தேசிய சர்வதேச முக்கிய தினங்கள் அனுசரித்தல், அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், செயலில் உள்ள இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், மாநிலங்களுக்கு இடையேயான இளைஞர் பரிமாற்ற திட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அமல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மாநில இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை இயக்குநர்கள் சரவணன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டின் உள்ள 38 மாவட்டங்களின் துணை இயக்குநர்கள், மாவட்ட இளைஞர் அலுவலர்கள், கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட மை பாரத் இளைஞர் அலுவலர் சரண். வி. கோபால் ஒருங்கிணைத்தார்.



