நாகர்கோவில், ஜூன் 20 –
குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி பணி வேகமாக நடந்து வருகிறது. சாகுபடி பணிக்காக கடந்த 1-ம் தேதி மாவட்ட நிர்வாகம் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தண்ணீர் திறப்பு மற்றும் மாவட்டத்தில் மழை பெய்ததால் சாகுபடி செய்யாமல் இருந்த பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். குமரி மாவட்டத்தில் பறக்கை, சுசீந்திரம், தேரூர், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி பணி முடிந்துவிட்டது. மற்றப் பகுதியில் தற்போது வேகமாக சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் தற்போது நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இயந்திரம் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவித்துள்ளது. அதன்படி 1 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தால் ரூ.4 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் இயந்திர நடவு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் ஒரு குவிண்டால் நெல்லிற்கு ரூ.2,400 முதல் ரூ.2,450 வரை கிடைத்து வருகிறது. நெல்லிற்கு தற்போது நல்ல விலை கிடைப்பதால் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேச்சுப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைமடையை சென்று சேரவில்லை. இதனால் கடைமடைப் பகுதியில் சாகுபடி பணி நடப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தெங்கம்புதூர் சானலில் தண்ணீர் செல்லாததால் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள வயல்களில் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இது குறித்து விவசாயி கூறியதாவது: தற்போது கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறந்து விட்டும் தெங்கம்புதூர் சானலில் கடைவரம்பு பகுதிக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக பறக்கைப் பகுதியில் சாகுபடி பணி முடிந்துள்ளது. இதுபோல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியிலும் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வேளையில் நாங்களும் சாகுபடி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெங்கம்புதூர் கடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.


