தஞ்சாவூர், ஜூலை 7 –
கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி போராட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராகினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2017 ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி கதிராமங்கலத்தில் ஓராண்டு நினைவுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி செழியன், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் உள்பட 29 பேர் மீது பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டான தஞ்சாவூர் முதலாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கோவி. செழியன், மணியரசன், டி ஆர் லோகநாதன் உள்பட9 பேர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



