கன்னியாகுமரி, செப்.14.
தேரூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் “எனது குப்பை, எனது பொறுப்பு” இயக்கம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கோ.சங்கர சுப்பிரமணியன் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திடக்கழிவுகளை ஈரக் கழிவு, உலர் கழிவு, வீட்டு அபாயகரமான கழிவு, சுகாதாரக் கழிவு என 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குப்பைகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பதன் மூலம் ஈரக் கழிவுகளை உரமாகவும், உலர் கழிவுகளை மறுசுழற்சிக்கும் பயன்படுத்த முடியும் என்றும், கழிவுகள் ஒன்றாகக் கலந்தால் மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிப்பு பாதிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



