கிருஷ்ணகிரி, ஆக. 4 –
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய்யைக் கண்டித்து திமுக தொண்டர்கள் தொடர்ந்து ஆவேசமாக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருக்கும் இடையே திடீரென கடும் தள்ளுமுள்ளு உருவானது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் – ஊத்தங்கரை பிரதான சாலையில் அமர்ந்து திமுகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினரை ஊத்தங்கரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட திமுகவினரை காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்றபோது, ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தவெக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வாகனத்தில் சென்ற கைது செய்யப்பட்ட திமுகவினர், அங்கு கூடியிருந்த தவெகவினரை பார்த்தவாறு மீண்டும் ஆவேசமாக கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இரு கட்சியினரும் எதிர்எதிரே இருந்த சூழலில் கோஷங்கள் எழுப்பப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியது.



