சென்னை, ஜூன் 08 –
உலகின் முன்னணி தரவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ்பீரியன், தனது புதிய ‘இண்டஸ்ட்ரி இன்சைட்ஸ் – மே 2026’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் சில்லறை கடன் சந்தை வலுவான வளர்ச்சியை கண்டுள்ளதைக் காட்டுகிறது.
பிணையத்துடனான கடன் வழங்கலில் வளர்ச்சி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறப்பான போக்குகள் ஆகிய அம்சங்களை இந்த அறிக்கை முன்னிலைப்படுத்துகிறது. இந்த வளர்ச்சியும், நேர்மறையான போக்குகளும் ஒருங்கிணைந்து, நம் நாட்டில் தற்போது நிலவும் நிலையான கடன் சூழலை வெளிப்படுத்துகின்றன.
மார்ச் 2026 நிலவரப்படி, நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 19% அதிகரித்து, ரூ. 137 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோல், புதிதாக வழங்கப்பட்ட கடன்களின் அளவும் கடந்த ஆண்டை விட 31% அதிகரித்து ரூ. 75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் கடன்களைப் பெறுவதை காட்டுகிறது.
கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் போக்குகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. மார்ச் 2026-ல், 30 நாட்களுக்கு மேல் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் விகிதம் (Net 30+ Delinquencies) சுமார் 3.0% ஆகக் குறைந்து மேம்பட்டுள்ளது.
தனிநபர் கடன்கள், தங்கக் கடன்கள், நுகர்வோர் சாதனங்களுக்கான கடன்கள், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் இருசக்கர வாகனக் கடன்கள் என அனைத்துப் பிரிவுகளும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன. இது, இந்தியாவின் கடன் சந்தையில் அனைத்துப் பிரிவுகளிலும் பரவலான தேவை இருப்பதைக் காட்டுகிறது.


