நாகர்கோவில், மே 28 –
நாகர்கோவிலில் உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கினர்.
இன்று தமிழகம் முழுவதும் உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆதரவற்ற முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள் போன்ற அடித்தட்டு மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என ஆணையிட்டு இருந்தார். முதல்வரின் உத்தரவை ஏற்று தமிழக வெற்றி கழகத்தினர் மாநிலம் முழுவதும் உணவு வழங்கினர்.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கினர். நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகர செயலாளர் சிவன் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை மாவட்ட செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில்: உலக பட்டினி தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த வருடங்களில் உணவு வழங்கி வந்தோம். தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் ஆணைக்கிணங்க கழக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினோம். காப்பகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உணவு வழங்கப்பட்டது. நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகர செயலாளர் சிவன் தலைமையில் உணவு வழங்கினோம். மக்கள் இயக்கமாக இருந்து செய்து வந்த பணியை தற்போதும் செய்து வருகிறோம். தவெக ஆட்சியில் யாரும் உணவின்றி இருக்கக் கூடாது அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு முதல்வர் விஜய் செயல்பட்டு வருகிறார்.



