சுசீந்திரம், ஜூன் 6 –
தேரூர் பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 பற்றி மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இதில் தேரூர் பேரூராட்சி தலைவர்அமுதா ராணி அவர்கள் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் ராஜ், ஆறுமுகம், ஐயப்பன், சங்கரம்மாள், ராஜேஸ்வரி, வீரபத்திர பிள்ளை சரஸ்வதி தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் உருவாகும் திடக் கழிவுகளை நான்கு வகைகளாக பிரித்து வீடு தோறும் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மக்கும் கழிவுகளான காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், இலைகள், பூக்கள் உள்ளிட்ட தோட்ட கழிவுகளை பச்சை நிறக் கூடையிலும், காகிதம், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மக்கும் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை நீல நிறக் குடையிலும் சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் டயப்பர், நாப்கின், பஞ்சுகள், சிரிஞ்சுகள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்ய முடியாத மருத்துவக் கழிவுகளை சிவப்பு நிறக் கூடையிலும், பேட்டரிகள், காலாவதியான மருந்துகள், ரசாயன பொருட்கள், சி எப் எல் பல்புகள் உள்ளிட்ட சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஆபத்தான கழிவுகளை கருப்பு நிறக் கூடையிலும் சேகரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



