தென்காசி, ஏப்ரல் 25 –
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பனை மரத்தில் பதநீர் இறக்கிய தொழிலாளியான மணிகண்டன் என்பவரை சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட நிலையில் படுகாயங்களுடன் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவரை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க தலைமை மருத்துவருக்கு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்: பனைமரம் ஏறும் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட செயல் மனித தன்மையற்ற செயல் எனவும் எவ்வளவோ கொள்ளையர்கள், திருடர்கள் உள்ளார்கள் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தினமும் பிழைப்புக்காக மரம் ஏறி பிழைப்பு நடத்தும் ஒரு தொழிலாளியை சுட துரோகிக்கு கூட மனசு வராது எனவும் இது போன்ற கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



