நாகர்கோவில், ஜூன் 4 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறைக்கு பின் இன்று 4-ம் தேதி திறந்த தைத்தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவியர்களை வரவேற்க்கும் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் பகுதியில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், வருகை தந்து புதிய மாணவர்களை வரவேற்று, மாலை அணிவித்து கௌரவித்து, பாடப்புத்தகம் வழங்கினார்.
தொடர்ந்து பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு புதிய மாணவ-மாணவியர்கள் உற்சாகமாக வந்தனர். நம்முடைய பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெற்றோர்களிடையே கடந்த ஒரு வாரம் கல்வி துறை அதிகாரிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக, இந்த ஆண்டு மட்டும் முதல் வகுப்பில் கூடுதலாக 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வரும் நாட்களில் இன்னும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை கூடுதலாக சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்வது? என்பது குறித்து ஆசிரியர்களுக்கு 3 நாட்களாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு தேவையான புத்தக பைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த பட்டியலைப் பெற்று, அவற்றைச் சீரமைத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், மாணவ-மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்களை வழங்கி, இனிப்புகளை ஊட்டினார். மேலும் பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் போர்டில் முதலாம் வகுப்பு மாணவன் ஒருவனைத் தூக்கி வைத்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராஜ், கவிமணி தேசிக விநாயகம் பள்ளி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கமலா மற்றும் பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



