தஞ்சாவூர், ஆக.22:
அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு சரியான தலைமைப் பண்பு இல்லாததே முக்கிய காரணம் என முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
“வணிகத்தில் நெருக்கடியான சூழலில் தலைமைப் பண்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை என்றார். நிர்வாகத் திறன் குறைபாடு, தவறான நோக்கங்கள் மற்றும் போதிய தலைமைப் பண்பு இல்லாததால் வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் தமிழ்நாடு அரசின் நிறுவனங்களின் மூலதனச் செலவு 8 சதவீதமாகவும், சராசரி மூலதனத்தின் மீதான வருவாய் 0.8 சதவீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை மறுசீரமைத்து, அவற்றை சரியான நோக்கத்துடன் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்துப் பேசிய அவர், ஒரு ரூபாய் வருவாய் கிடைத்தால் அதைவிட அதிக தொகை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவாகிறது எனக் குறிப்பிட்டார். மக்களுக்கு குறைந்த செலவில் வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை வழங்குவதே அரசுப் போக்குவரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தாம் அமைச்சராக இருந்த 2 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ததாகவும், அதில் சுமார் 1,300 கோப்புகளை திருப்பி அனுப்பியதாகவும் பழனிவேல் ராஜன் கூறினார். ஏற்கனவே பல அதிகாரிகள் கையெழுத்திட்ட கோப்புகளில் மாற்றம் தேவையில்லை எனக் கருதி மீண்டும் கையெழுத்திடுவது மட்டுமே நடைமுறையாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தாம் திருப்பி அனுப்பிய கோப்புகள் மூலம் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அதுவே மிகப்பெரிய புரட்சி என்றும் அவர் கூறினார். மேலும், தங்களது ஆட்சிக்காலத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 கோடியாக குறைக்கப்பட்டதாகவும், வரலாற்றில் செய்ய முடியாத மாற்றத்தை மேற்கொண்டதாகவும் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கத் தலைவர் ஆசிப் அலி தலைமை வகித்தார். சங்கச் செயலர் ராமநாதன், பொருளாளர் முத்தையா, துணைத்தலைவர் பிரபு, இணைச் செயலர் சுந்தர நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழில், வர்த்தகத் துறையினர் கலந்து கொண்டனர்.



