வேலூர், ஜூலை 07 –
காட்பாடி மதிநகர் பகுதியில் இருந்து அறுப்புமேடு செல்லும் சாலையோரம் ‘பாண்டியன் மடுகு’ புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள (கனி அமுது) தனியார் திருமண மண்டபம் அருகே மழைநீர் செல்லும் கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த கால்வாய் கரையின் ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு தற்போது ஒயர்கள் (மின்கம்பிகள்) ஏதுமின்றி கைவிடப்பட்ட பழைய மின்வாரிய இரும்பு கம்பம் ஒன்று உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கால்வாய் புனரமைப்பு பணிகளின் காரணமாக இந்த பழைய மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் தனது பிடிப்பை இழந்து பலத்த காற்று வீசும் போதெல்லாம் அபாயகரமாக ஆடி வருகிறது. எந்த நேரத்திலும் இது சரிந்து விழலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந்தச் சாலையானது மதிநகர் மற்றும் அறுப்புமேடு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதையாகும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் என தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியைக் கடந்து செல்கின்றனர். மின்கம்பிகள் இல்லை என்றாலும், இரும்பு கம்பம் திடீரென சரிந்து விழுந்தால் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ அல்லது விபத்தோ ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் இந்த ஆபத்தான பழைய மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



