கன்னியாகுமரி, ஜூலை 4 –
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சுவாமி விவேகானந்தரின் 125வது நினைவு நாளை முன்னிட்டு அன்னபூஜை நடந்தது. வீரத் துறவி’ என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய 125 நினைவு நாளை முன்னிட்டு கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள சபாகிரக அரங்கில் அன்னபூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதாதேவி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடே ஆகியோரது உருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. படங்களுக்கு கேந்திர துணை தலைவர் நிவேதிதா, தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, கேந்திர இணை பொதுச்செயலாளர் ரேகாதவே, கேந்திர மண்டல நிர்வாக செயலாளர் ராதாதிதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தென்மாவட்டங்களில் உள்ள விவேகானந்தா கேந்திர தொண்டர்கள் பொதுமக்களிடம் சேகரித்த சுமார் 10 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அதன் மேல் அன்னபூரணி விக்கிரகத்தை ஆவாஹனம் செய்து அன்னபூஜை நடந்தது. அப்போது ஆதிசங்கரரின் அன்னபூர்ணா ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதையில் உள்ள விஸ்வரூப தரிசன ஸ்லோகங்கள் ஆகிய வழிபாடுகள் நடந்தது. பூஜைக்கு பின்னர் அன்னபூரணி தேவிக்கு மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராம முன்னேற்ற தொண்டர்கள், பள்ளி மாணவர்கள், கேந்திர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் நன்றி கூறினார்.



