விளாத்திகுளம், மார்ச் 28 –
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கோவில்பட்டி அருகே உள்ள கே.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த அதிமுகவின் நீண்ட கால விசுவாசியும், தற்போதைய அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றி வரும் ராமச்சந்திரனின் மகளான சத்யாவை அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி அதிமுக, பாரதிய ஜனதா கட்சியினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உள்ளிட்ட கூட்டணி தோழமைக் கட்சியினர், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகளை வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக சத்யா பொறுப்பு வகித்து வந்தார். 2021ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நீண்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு செப்டம்பர் 2022-ல் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



