ஈரோடு, பிப். 3 –
விடுதலை வேங்கைகள் கட்சி மாநில தலைவர் தமிழின்பன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு பவானி சாலை லாரி ஓனர்கள் அசோசியேசன் பங்க் அருகில் சேட் கோயில் செல்லும் வழிச்சாலையில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்ற வருடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை மாலையாக அணிந்து கண்களை கட்டிக்கொண்டு மாநகரத் தலைவர் நடராசு, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேங்கை வீரமுத்து, திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், தமிழ்நாடு உழைப்பாளி மக்கள் கட்சி தலைவர் முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குமார் ஆகியோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அப்போது அவர்கள் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி கண்களை கட்டியுள்ள கருப்பு துணியை அகற்றிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மக்கள் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று விடுதலை வேங்கைகள் கட்சி மாநில தலைவர் தமிழின்பன் கூறினார்.



