நாகர்கோவில், ஜூலை 7 –
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று குமரி வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் பேட்டி அளித்தார். அவர் கூறும் போது 2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த கூட்டமும், கிராம கமிட்டியின் நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நெல்லையில் கூட்டம் நடக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத் தில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் கூட்டணி, எந்த தொகுதி கேட்க வேண்டும்? எவ்வளவு தொகுதி கேட்க வேண்டும்? போன்றவை குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழக வெற்றி கழக செயற்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, கோட்பாடு உண்டு. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாசிச மதவாத சக்திகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. பாரதிய ஜனதா மதவாதம் கட்சி, காங்கிரஸ் கட்சி எல்லோருக்குமான கட்சி. ஜனநாயகத்தை விரும்பும் கட்சி. தேர்தலை மட்டும் குறிக்கோளாக கொண்டு காங்கிரஸ் செயல்படுவதில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறது.
கட்சியில் கொள்கை, கோட்பாடு இருப்பதால் விஜய் தனது கூட்டத்தில் காங்கிரஸ் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்த காவலாளி அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினேன். ஆவின் துறையில் அவரது சகோதரருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பணியிட மாறுதல் கேட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். நேரில் சந்தித்தும் முறையிடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். உடன் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.