கருங்கல், ஜூலை 4 –
பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, கறுக்கன்குழி, மலையன்விளை, விளாகம் பகுதி மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட தூரம் சென்று வழுதலம்பள்ளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இவர்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்க சிரமமாக இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் வடலிவிளையில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வடலிவிளையில் ரேசன் கடை கட்டிடம் கட்ட ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த புதிய பகுதி நேர நியாயவிலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், வார்டு உறுப்பினர் ரெவி, நிர்வாகிகள் லாசர், கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் ரிஷாக் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.