திருப்பூர், ஜூலை 11 –
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் மேற்பார்வையில் திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லடம் அருகே திருச்சி- கோவை ரோடு வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் போலீசார் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி காமராஜ் நகரை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) என்பதும், இவர் கோவையில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி சென்னிமலையில் உள்ள அரவை மில்லுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர். மேலும் 11 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.


