நாகர்கோவில், ஏப். 16 –
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் அரசியல் உரிமைகளை பறிக்கும் செயல் என தமிழக முதல் அமைச்சர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் பேராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டினார்கள். ராமவர்மபுரத்தில் தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தனது இல்லத்தில் கருப்பு கொடியை ஏற்றி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதேபோல திமுக அமைப்பு செயலாளர் ஆஸ்டின் நாகர்கோவில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், கலை இலக்கியப் பகுத்தறிவுச் செயலாளர் திரு செல்வம் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடியேற்றினர்.
அழகியமண்டபம் அருகே, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் திமுகவினர் தங்கள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாள் நடைபெற்ற இந்த போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



