தருமபுரி, ஜூன் 19 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இடைத்தரகர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை – 1 ராஜேஸ்கண்ணா கையூட்டு பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாகராஜ், காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான குழுவினர் காலை முதல் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளரும் உடனிருந்தார். வாகன பதிவு, தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின்போது அலுவலகத்தில் உள்ள கோப்புகள், ரசீது புத்தகங்கள், பண பரிவர்தனை பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் கணக்கில் வராத பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டு எடுத்து சென்றுள்ளனர்.
லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியது.



